பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.யூ. அப்துல் சமட் தெரிவித்தார்.
பொத்துவில் நகரில் உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்கள், பேக்கரிகள் என்பவற்றில் தொடர்ச்சியாக திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பரிசோதனையின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத உணவுப் பண்டங்கள், பொருட்கள், காலாவதியான பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு வருவதாடு, உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உணவு சட்ட விதிமுறைகள், நுகர்வோர் விவகாரசட்டங்கள் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு அமைய வேண்டுமெனவும், உணவு தயாரிப்போர், உணவு விநியோகிக்கும் இடம், பயன்படுத்தும் உபகரணம் போன்றவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும், உணவகங்களில் பணியாற்றுபவர்கள் முகக்கவசம், கையுறை போன்றவற்றை பாவிக்க வேண்டுமென கேட்டுள்ளார்.
பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உணவகங்கள் மூடப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.வீதி ஓரங்களில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பழங்களை விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு தவறான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபர்)