24ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து அமைச்சர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை நீக்குவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றைய தினம் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் பிரதிவாதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பதில் பொதுச் செயலாளர் சரதி துஷ்மந்த மித்திரபால உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நியாயமான ஒழுக்காற்று விசாரணையின்றி தம்மை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சி செயற்குழு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை செல்லுபடியற்றது என என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியே சம்பந்தப்பட்ட மூவரும் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அதன் போதே இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்