இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் தொழில் உரிமைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள பிரசுரத்தின் அடிப்படையில் C155, C187, C190 ஆகிய எண்களின் அடிப்படையில் வேலைத்தலப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான சட்டத்தை உடனடியாக அங்கீகரித்தல், வேலைத்தல பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சட்டத்தை அமுலுக்கு உடன் கொண்டுவருதல், வேலைத்தலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல் ஆகியன குறித்து நேற்றுமுன்தினம் (03.04.2024) கொட்டகலை காங்கிரஸ் தொழில் நிறுவன வளாகத்தில் கையெழுத்துகளைத் திரட்டும் நடவடிக்ைக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர் உரிமையை முன்னிறுத்தி ஒரு வார காலத்திற்கு 10,000 கையெழுத்துக்களை திரட்டும் நோக்கில் மேற்படி ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பெருந்திரளான தோட்டத் தொழிலாளர்களும், இ.தொ.காவின் உத்தியோகத்தர்களும், இளைஞர்களும், யுவதிகளும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கையொப்பமிட்டதைக் காணக் கூடியதாகவிருந்தது.
ஒருவார காலத்திற்குள் 10 ஆயிரம் கையெழுத்துக்களை திரட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.
மலையகம் எங்கும் உள்ள தோட்டங்களில் இவ்வாறு கையெழுத்துகள் திரட்டப்படுகின்றன.
எஸ். தேவதாஸ்
(இ.தொ.கா ஊடகப் பிரிவு)