சமய நல்லிணக்கம் மற்றும் சமூகப் பணிகளில் 1970 முதல் இந்திய தமிழ்நாடு மாநிலத்தில் பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ரஹ்மத் அறக்கட்டளை அமைப்பாகும். நூல் வெளியீட்டுத்துறையில் முன்னணி வகிக்கும் இந்நிறுவனம் நபி(ஸல்) அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரங்களை உள்ளடக்கிய அறபியில் ‘ஸிஹாஹ் ஸித்தா’ என அழைக்கப்படும் ஆறு ஹதீஸ் நூல்களின் தமிழ்மொழிபெயர்ப்பு தொகுதியினை வெளியிட்டுள்ளது. அறபு மொழியில் உள்ள நூல்களை தமிழ் பேசும் வாசகர்களின் கைகளில் சென்றடைய வைக்கும் அரிய முயற்சி இதுவாகும்.
றஹ்மத் அறக்கட்டளை நிறுவனமும் தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து பல்கலைக்கழக சமூகத்தினருடன் துறைசார் விற்பனர்களைகளையும் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து ‘ஸிஹாஹ் ஸித்தா’ நூல் அறிமுக விழாவினை அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீடக் கலையகத்தில் நடத்தியுள்ளன.
றஹ்மத் அறக்கட்டளை நிறுவனம் இலங்கையில் ஒரு தேசியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளும் முதல் முயற்சியாக இவ்வெளியீடு நோக்கப்படுகிறது. நபி(ஸல்) அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரங்களை உள்ளடக்கிய ஹதீஸ் நூல்களில் புஹாரி, முஸ்லிம் ஆகிய இரண்டும் தமிழ்மொழியில் வெளிவந்த நிலையில், ஏனைய கிரந்தங்களான அபூதாவூத், திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்ட அரிய முயற்சியின் பலன் இதுவாகும்.
விழாவின் ஏற்பாட்டாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட தமிழ்ப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவின் ஒருங்கிணைப்பில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலை, கலாசார துறைப் பீடாதிபதி எம்.எம்.பாஸில் வரவேற்புரையாற்றினார். சென்னை,மந்தைவெளி,ஈத்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா கே.எம்.இல்யாஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம்.மஸாஹிர், புதுக்கோட்டை மஸ்ஜிதுதே மஹ்மூத் தலைமை இமாம் அல்-ஹாஃபிழ் ஏ.பீர் முகம்மது ஆகியோர் உரையாற்றினர்.
றஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தினால் 208 நூல்கள் தென்கிழக்குப்பல்கலைக் கழகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டன. நூலகர் எம்.எம். றிபாவுடீன் நூல்களின் தொகுதியொன்றைப் பெற்றுக் கொண்டார். ஆய்வு இருக்கையில் கவிக்கோ அப்துல் றஹ்மான் மற்றும் பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் பெயரில் ஆய்வுகளுக்கான தேர்வு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவற்றுடன் வசதி குறைந்த மாணவர்கள் சிலருக்கு பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்வதற்கான புலமைப்பரிசில் திட்டமொன்று ஏற்படுத்த ஆலோசித்திருப்பதாகவும் இவைகளை றஹ்மத் அறக்கட்டளை நிறுவனமே முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஸ்மி எம்.மூஸா
பெரியநீலாவணை தினகரன் நிருபர்