லெபனான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் 15ஆவது பாதுகாப்பு படை குழு நேற்றையதினம் (03) லெபனான் புறப்பட்டது.
அக்குழுவில் பல்வேறு இராணுவப் படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் என 125 இராணுவ வீரர்கள் உள்ளடங்குகின்றனர். குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன் கேணல் டி.கே.டி. விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, 14ஆவது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் பண்டாரநாயக்க, இராணுவ போக்குவரத்து நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அனில் பெரேரா, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த குழுவினரை வழியனுப்பினர்.