நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பானது சட்டமாக கொண்டு வரப்படவுள்ளதுடன், எதிர்வரும் மே மாதத்தில் அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் அந்த சட்டமூலத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் எதிர்காலத்தில் யார் நாட்டை ஆட்சி செய்தாலும் நாட்டின் பொருளாதார கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்காத அனைவருக்கும் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முதல் நிலுவை பணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில சிக்கல்கள் காரணமாக இதுவரை அந்த நிதி வழங்கப்படாதுள்ளவர்களுக்கு எதிர்வரும் புதுவருடத்துக்கு முன் அதனை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு, அவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதேவேளை அஸ்வெசும கொடுப்பனவு ஆரம்பிக்கப்பட்ட 2023 ஜூலை மாதத்திலிருந்து இதுவரை காலமும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாத அனைவருக்கும் அதனை நிலுவையுடன் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்