சவூதி அரேபியா புனிதமிகு ரமழான் மாதத்தில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் நோன்பு கடமையை நிறைவேற்றுவதற்காக தன்னாலான பங்களிப்பை வழங்கி வருகிறது. நோன்பு காலங்களில் இலவச பேரீச்சம்பழ விநியோகம், உலர் உணவுப் பொதி விநியோகம், இப்தார் நிகழ்ச்சிகள், இலவச உம்ரா திட்டங்கள் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
வழமையாகவே சவூதி அரேபியா பல மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இலவசமாக விநியோகித்து வருகின்றது.இம்முறை வழமைக்கு மாறாக தன்னுடைய சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், அதிகமான நாடுகளில் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இம்முறை சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு மற்றும் தஃவா வழிகாட்டல் அமைச்சு என்பன சவூதி தூதரகங்களுடன் இணைந்து இதுவரை சுமார் 100 நாடுகளில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வுகளில் மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள், சமுகத் தொண்டர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சிகளினூடாக ரமழான் ஆரம்பப் பத்து நாட்களில் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர்.
இலங்கையிலும் சவூதி அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பல நோன்பு திறக்கும் வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பெருந்தொகையான பேரீச்சம்பழப் பொதிகள் பள்ளிவாயல்கள் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் இலங்கைக்கு சுமார் 50 மெட்ரிக் தொன் அளவு பேரீச்சம்பழங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சினூடாக வழங்கப்பட்டுள்ளன. மல்வானை பின் பாஸ் அரபுக் கல்லூரி, காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி, வெலிகம ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி மற்றும் பறகஹதெனிய ஸலபிய்யாக் கலாபீடம் போன்ற கலாபீடங்களில் சவூதி தூதரகத்தின் அனுசரணையில் இப்தார் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. குருநாகல், திஹாரி, கிண்ணியா உள்ளிட்ட பல இடங்களிலும் இப்தார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இலங்கையில் இவ்வாறான இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும், பேரீச்சம்பழங்களை விநியோகிப்பதிலும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் இப்னு ஹமூத் அல்கஹ்தானி ஆர்வத்துடன் செயற்படுகிறார்.
மேலும் மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவிக்கு வருகை தரும் அனைத்து யாத்திரிகர்களுக்கும் சவூதி அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தினசரி இப்தார் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தினசரி மஸ்ஜிதுந் நபவியில் மாத்திரம் சுமார் மூன்று இலட்சம் பேருக்கான இப்தாருக்குரிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இவ்வாறான பணிகளை தொடர்ச்சியாக ஆற்றிவருகின்ற மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸுஊத், மற்றும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆல் ஸுஊத், முஸ்லிம் விவகார அமைச்சர் ஷேய்க் அப்துல்லதீப் பின் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷேய்க் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஷ்ஷெய்க் எம்.ஏ.எம் ளபர்…
(மதனி) விரிவுரையாளர், இப்னு அப்பாஸ் அரபிக் கல்லூரி-, காலி