மட்டக்களப்பின் வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோயில் குருக்கள் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (27) உயிரிழந்துள்ளார்.
கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான முத்துலிங்கம் சாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு, தனது வீட்டுக்கு இவர் திரும்பிய போது, புணானை — மட்டக்களப்பு பிரதான வீதியில் இவர் விபத்துக்குள்ளானார். கனரக லொறியொன்று மோதி விபத்து இடம்பெற்றதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இவர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவ்வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
மண்டூர் தினகரன் நிருபர்