சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை எவராவது மாற்றுவார்களானால், அவர்களால் இரண்டு வாரங்களுக்குக் கூட அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் ஒத்துழைப்பு உடன்படிக்கையை அரசாங்கமே மேற்கொண்டதே தவிர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவ்வாறான கூற்றுக்களை வெளியிடுவோர் தொடர்பில் மக்கள் தெளிவு பெற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கடன் ஒத்துழைப்பு உடன்படிக்கையை யாராவது மாற்றுவது அல்லது திருத்துவது தொடர்பில் தெரிவிப்பார்களானால் அவ்வாறானவர்களுக்கு இரண்டு வாரங்கள் கூட அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
நாம் கடனை மீள செலுத்துவதற்காக நடத்திய பேச்சு வார்த்தை மற்றும் கடன் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தை அரசாங்கமே மேற்கொண்டதேயன்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை மேற்கொள்ளவில்லை.
லோரன்ஸ் செல்வநாயகம்