தமிழ்நாடு திருச்சியில் கடந்த 21 ஆம், 22 ஆம் திகதிகளில் இந்திய அருட்பணியியல் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தமிழ் சுதேச அருட்பணி’ மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கடந்த 22 ஆம் திகதியன்று ‘தமிழ் சுதேச ஆற்றுப்படுத்தல் பணி’ எனும் தலைப்பில், மட்டக்களப்பில் பிறந்தவரும், தற்போது தமிழ்நாடு- சென்னையில் வசிக்கும் கிறிஸ்தவ போதகரும், உளநல ஆலோசகருமான அருட்திரு. கு. நித்தியானந்தன் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார்.
இந்த ஆய்வுக்கட்டுரையானது, ஆங்கிலமயமாக விளங்கும் ஆற்றுப்படுத்தல் பணியை எவ்வாறு தமிழ் மக்களும் பயனடையும் வகையில் முன்னெடுக்கலாம் என்பதற்கான வழிகளை எடுத்துக்காட்டியது.
திருச்சியில் இரு நாட்கள் இந்திய அருட்பணியியல் நிறுவனத்தினரால் (Indian Missiological Institute) ஒழுங்கு செய்யப்பட்ட ‘தமிழ் சுதேச அருட்பணி’ என்ற இம்மாநாட்டில் அருள்திரு. நித்தியானந்தன் அவர்களது ‘மண்வாசனையுடன் மனநலச் சிகிச்சை’ எனும் உளவியல் நூல் ‘இனிய நந்தவனம்’ ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்திய அருட்பணியியல் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் அருட்திரு சி. இராஜசேகரன் நூலை அறிமுகம் செய்து வைத்தார். முனைவர் அருட்திருமதி இவாஞ்சலின் ஸ்டீபன் (Principal- Indian Missiological Institute) நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் நூலாசிரியர் அருட்திரு. கு. நித்தியானந்தன் உரையாற்றுகையில், ‘மண்வாசனையுடன் மனநலச்சிகிச்சை’ என்ற எனது நூல் மூலம் ஒரு பதிப்பாளனாகவும் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதுவரை படைப்பாளனாக 6 நூல்களை அளித்த நான், எனது இந்த 7 ஆவது நூலை ஓரு பதிப்பாளனாக உங்கள் முன்பாக சமர்ப்பிக்கிறேன்.
‘மண்வாசனையுடன் மனநலச் சிகிச்சை’ எனும் இந்நூல், எனது ‘Chris Counsellng Care’ உளநல மையத்தின் முதல் வெளியீடாக வருகிறது. நம் முன்னோர்கள் நம்மை ஊக்குவித்து வழிகாட்டிய, நமது நாளாந்த வாழ்க்கையின் எளிய நடைமுறைகள், இன்று எவ்வாறு உளநலச் சிகிச்சைகள் எனும் வடிவம் பெற்றுள்ளன என்பதை விபரிப்பதே இந்நூலின் நோக்கம். உளநலச் சிகிச்சைகளை வெளியே தேடாமல், விலை கொடுத்து வாங்காமல் நமது தமிழ்க் கலாச்சாரத்தில் கலந்து நிற்கும் எளிய பயிற்சிகளை மண்வாசனையுடன் தந்துள்ளது இந்நூல்.
தமது தலைமுறையினர் மனநலத்துடன் வாழவேண்டும்; எதிர் கொள்ளும் எந்தவொரு சவால்களையும், அதன் விளைவாக ஏற்படும் மனத்தாக்கங்களையும் மனோதிடத்துடன் சந்திக்கவும், அவற்றை வெற்றிகொள்ளவும் வேண்டும் என்பதையுணர்ந்து, எளிமையான, நாளாந்த நடைமுறைகளை பயிற்சிகளாக அளித்து எம்மை வழிநடத்தினர். அதனூடாக மனநலம் காத்தனர் நம்முன்னோர்கள். இன்றைய தலைமுறையினர் அவற்றை முடிந்தளவு பின்பற்றி, மனநலம் காக்க ஊக்கப்படுத்துகிறது இந்நூல். ‘Chris Counsellng Care’ உளநல மையத்தின் சார்பாக இந்நூலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்சியும் பெருமையும் அடைகிறேன்” என்று தெரிவித்தார்.
கு.நித்தியானந்தன்…
CHRIS COUNSELLING CARE