IPL T20 கிரிக்கெட் தொடரில் இன்று (24) பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ்–லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமானது. பங்கேற்றுள்ள இரு சீசன்களிலும் 3ஆவது இடத்துடன் தொடரை நிறைவு செய்த லக்னோ அணி இம்முறையும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் மீது அனைவரது கவனமும் திரும்பக்கூடும். ஏனெனில் அவர், தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் விலகியிருந்தார்.
T20 உலகக் கோப்பை தொடர் நெருங்கி வருவதால் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் இருப்பதில் கவனம் செலுத்தக்கூடும். இதனால் IPL தொடரில் தொடக்க ஆட்டங்களில் அவர், விக்கெட் கீப்பிங் பணியை துறந்து பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் கே.எல்.ராகுலுடன் குயிண்டன் டி காக், மார்கஸ் ஸ்டாயினிஸ், நிகோலஸ் பூரன் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.
சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சாளர்களில் மார்க் வுட்,டேவிட் வில்லி ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இதனால் வெளிநாட்டு வீரர்களில் நவீன் உல் ஹக், ஷமர் ஜோசப் ஆகியோரையே பெரிதும் சார்ந்திருக்கக்கூடும். உள்ளூர் வீரர்களான மயங்க் யாதவ், மோஷின் கான் ஆகியோர் உடற்தகுதி பிரச்சினையில் சிக்கி உள்ளனர். மேலும் யாஷ் தாக்குர், ஷிவம் மாவி ஆகியோருக்கு போதிய அனுபவங்கள் இல்லை.
அறிமுக தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் 2022ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. துடுப்பாட்டத்தில் கேப்டன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், துருவ் ஜூரெல், ரோவ்மன் பவல், ஷிம்ரன் ஹெட்மயர் வலுவானவர்களாக திகழ்கின்றனர். இவர்களுடன் ஷுபம் துபே, ரியான் பராக், சந்தீப் சர்மா, கோஹ்லர்-காட்மோர் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.
சுழற்பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல் கூட்டணி லக்னோ பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர், நவ்தீப் சைனி, அவேஷ் கான் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும்.