வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு செல்வோரின் நன்மை கருதி எச்.என்.டி., சிலியட், அத்துடன் இரத்மலானை நைட்டா நிறுவனத்தின் கீழ் வரும் மூன்று வருட டிப்ளோமா பாடநெறி ஆகிய மூன்றையும் சேர்த்து மாணவர்களுக்கு உயர் தேசிய Higher Education Degree பட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
எமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புகள் செல்லும் போது உயர் தேசிய டிப்ளோமாவுடன் சென்றாலும் அங்கு அவர்களுக்கு உரிய தொழில், சம்பளம் கிடைப்பதில்லை.எனினும் வேறு நாட்டவர்கள் இரண்டு வருடத்தில் எடுத்துக்கொண்ட பட்டப்படிப்பு சான்றிதழுடன் அங்கு வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த சம்பளம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிவில், மெக்கேனிக்கல் போன்ற துறைகளுக்கு செல்லும்போது என்ஜினியருக்கு உள்ள திறமை, ஆற்றல் நம்மவர்களுக்கு உள்ள போதும் பட்டப்படிப்பு அதற்கு தடையாக உள்ளது. இவற்றை கவனத்திற் கொண்டே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொறியியலாளர் மட்ட ஆற்றல் அவர்களுக்கு உள்ளது. எனினும் அவர்களுக்கு குறைந்த சம்பளமே கிடைக்கிறது. இதற்கு காரணம் அவர்களிடம் பட்டம் இல்லாமையே.
இதனால், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாம் ஐ.எஸ்.எல். மற்றும் தொழில் நுட்பவியலாளர் நிறுவனம் உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதித் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எதிர்காலத்தில் இந்த பாடங்களுக்கு இணைத்துக் கொள்வோருக்கு பட்டப்படிப்பு வரை செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
சிட்னி எக்கோட் மட்டத்தில் இதனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்