சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான இரண்டாவது மீளாய்வு குறித்து, அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நிதி ஒருங்கிணைப்பு, நிதிக்கொள்கை, நிதித்துறை ஸ்திரத்தன்மை மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள வலுவான முன்னேற்றம் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அடுத்த இரண்டு மாதங்களில், நாணய நிதியத்தின் அடுத்த தவணை நிதியைப் பெறுவதற்காக, அதன் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெறுவதற்கு திட்டமிட்டு, கடன் மறுசீரமைப்பில் மேலும் முன்னேற்றத்தை அடைய இலங்கை தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சேமசிங்க குறிப்பிட்டார்.
2023, நான்காம் காலாண்டில் இலங்கை 4.5வீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், இது பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து அபிவிருத்தி மாற்றத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 02 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களில் காணப்பட்டுள்ள முன்னேற்றம் இது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், இந்த சீர்திருத்தங்களுக்கு அப்பால் செயல்படுவது அல்லது பின்நோக்கி செல்வது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மீண்டும் ஒரு காரணமாக அமையக்கூடுமென தெரிவித்த அமைச்சர், இதன் விளைவாக, அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வு, குறிப்பாக வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள், பாரிய சவால்களுக்கு உள்ளாகலாம் என்றும் கூறினார்.