தெமட்டகொட ஹைரியா பெண்கள் கல்லூரியில், துபாய் சயீடா பௌண்டேசனின் சுமார் 11 கோடி ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிகளைக்கொண்ட கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா (17) பாடசாலையின் அதிபர் திருமதி நஸீரா ஹஸனார் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌஸி கலந்துகொண்டு நினைவு தூபியை திறந்து வைத்து வைபவத்தை ஆரம்பித்து வைத்தார். சயீடாவின் இலங்கை இணைப்பாளர் நௌஸர் பௌஸியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், றிஸாத் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்கா, திலங்க சுமதிபால, முன்னாள் கொழும்பு மேயர் அஸாத் சாலி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி, கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் இக்பால் ஆகியோர் அடிக்கல்லினை நட்டி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலையின் பழைய மாணவிகள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
முதற் கட்ட நிதியை காசோலை மூலம் அதிதிகள் பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்ததுடன் பிரதம அதிதிக்கும், நௌஸர் பெளசிக்கும் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
tkn-03-20-pg09-R1 ருசைக் பாரூக்