பலருக்கும் ஒரு சந்தேகம் உண்டு. ஸ்ரீ சக்கரமும், ஸ்ரீ மஹா மேரு எனப்படும் யந்திரமும் ஒன்றேதானா இல்லை வெவ்வேறானவையா என்பதே அந்த சந்தேகம். உண்மை என்ன என்றால் இரண்டுமே ஒன்றுதான். ஸ்ரீ மஹா மேருவின் சமதளப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம் என்பதாகும். ஸ்ரீ சக்கர யந்திரத்தை கோடுகளாக வரைந்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு மலை போன்ற அடுக்கடுக்கான நிலையிலான முப்பரிமாண உருவ வடிவம் கொடுத்தால் அது ஸ்ரீ மஹா மேரு எனவும் கூறப்படும். பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் ஆதிபராசக்தியின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம் என்பதே இதன் மகிமை.
பண்டாஸுர வதத்திற்குப் பிறகு ஸ்ரீபுரம் என்னும் நகரத்தில் அவளுடைய அரண்மனையில் எல்லா தேவதைகளும் சூழ்ந்திருக்க தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் லலிதாம்பிகை வீற்று இருக்கையில் ஒரு சிறிய விஷயத்திற்காக உக்கிரம் அடைந்த தேவியின் முகத்தில் இருந்து வாசினிகள் என்ற தேவதைகள் வெளிவந்து அவள் முன் நின்றபோது அந்த தேவதைகளை நோக்கி தான் யார், தன் சக்தி எப்படிப்பட்டது என்பதை அனைவருக்கும் கூறுமாறு தேவி கூற அதன்படி வசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக ஆயிரம் நாமங்களைக் கொண்ட ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர். அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக் கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து, ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து அவளை சாந்தப்படுத்த, பார்வதி தேவி, அன்னை லலிதாம்பிகையாக உருமாறி உலகிற்கு காட்சி தந்தாள்.
(தொடரும்)