தினகரன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு 92 ஆண்டுகளாகின்றன. இந்த 92 ஆண்டு காலத்தில் தினகரன் ஆற்றி வரும் பணிகள் யாவும் போற்றுதலுக்குரியனவாக இருந்தன. 30 வருட யுத்த காலத்திலும் செய்திகளை வௌியிடுவதிலும் தகவல்களை வழங்குவதிலும் தினகரன் நடுநிலையாக நின்று மக்களுக்கு உண்மை நிலவரங்களை உடனுக்கு உடன் வழங்கி ஓர் உன்னதமான சேவையை ஆற்றியது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது அரசாங்க பத்திரிகை அரசாங்கத்துக்கு சார்பான செய்திகளை மட்டும் தான் பிரசுரிக்கும் என்ற ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை தவிடு பொடியாக்கிய ஒரு பத்திரிகையாக தினகரன் விளங்குகிறது.
தினகரன் யுத்த காலத்தில் எப்படி தங்குதடை இன்றி பத்திரிகையை வௌியிட்டு வந்ததோ, அதேபோல கொரோனா காலத்திலும் காலத்திற்கு ஏற்ற விதத்திலே இ பத்திரிகையாக வௌியிட்டு மக்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளிலேயே பத்திரிகையை வாசிக்கக்கூடிய விதத்தில் வழிவகை செய்தது.
எந்த காலகட்டத்திலும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்து வந்த தினகரன், ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெருமைக்குரியது என்றால் மிகையாகாது.
கடந்த 92 ஆண்டுகளாக பாரிய சேவையாற்றியது போல் தொடர்ந்தும் அரும்பணிகள் பல ஆற்றி வெற்றி நடை போட வாழ்த்துகிறேன்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.