இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம் எதிர்வரும் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நிறைவு வரை இலங்கை கிரிக்கெட் சபை நீடித்துள்ளது.
சில்வர்வுட்டின் இரண்டு ஆண்டு ஒப்பந்தக் காலம் எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதி முடிவடையவுள்ளது. இதற்கு இரண்டு மாதங்களிலேயே ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது. ரி20 உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பயிற்சியாளரான சில்வர்வுட் கடந்த 2022 ஏப்ரல் மாதமே இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
சில்வர்வுட்டின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி இதுவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 என ஒட்டுமொத்தமாக 91 போட்டிகளில் ஆடி அதில் 48 ஆட்டங்களில் வெற்றியீட்டி இருப்பதோடு 39 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.