நீச்சல் மற்றும் உயிர்காப்பு பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பால் இலவசமாக இப்பயிற்சிநெறி அக்கரைப்பற்று தேசிய பாடசாலை நீச்சல் தடாகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டு, இப்பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார்.
இப்பயிற்சிநெறியை பூர்த்தி செய்த பாலமுனை இளைஞர்கள் சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்களாகிய 60 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அண்மைக்காலம் முதல் கடல் உட்பட நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இப்பயிற்சிநெறி மிகவும் முக்கியமானதாக உள்ளது.
பாலமுனை விசேட, ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்