அனர்த்த அபாயத்தை குறைக்கும் வேலைத்திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அனர்த்த முகாமைத்துவக் கற்கையை பூர்த்தி செய்த தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளை அம்பாறை மாவட்டத்தில் வினைத்திறனுடன் கொண்டு முன்னெடுப்பதற்காக சுமார் 300 க்கும் மேற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் சகல பிரதேச செயலகங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிலையான அபிவிருத்தியுடன் அனர்த்த குறைப்பு செயற்றிட்டத்தை கிராமங்கள் தோறும் முன்னெடுக்க அனர்த்த முகாமைத்துவ தொண்டர் குழுக்களை வழிப்படுத்தும் செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அனர்த்தம் தொடர்பாக முதலில் அதிகாரிகள் அறிந்திருந்தாலே மக்களுக்கு உரியநேரத்தில் உரிய தகவல்களை வழங்க முடியும். நாம் அனைவரும் பிரதேசத்தின் அனர்த்த பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்றார்.
ஒலுவில் விசேட நிருபர்