28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூடினார்.
உலக அழகி போட்டி என்றாலே மினுமினுக்கும் லைட், அழகிய பெண்கள், கவர்ச்சியான ஆடைகள் என கற்பனையில் தோன்றும். ஆனால், அழகு மட்டும் இல்லாமல், திறமை, அறிவு, சமூக சேவை மனப்பான்மை போன்ற பல திறன்களையும் கொண்டாடும் ஒரு மேடையே இது. 1951ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முறையாக உலக அழகிப் போட்டி நடைபெற்றது. 1996ஆம் ஆண்டு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டது.
மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 71ஆவது உலக அழகிப் போட்டியில் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இந்தியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த அழகிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.
இதில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024ஆம் ஆண்டுக்கான 71ஆவது உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் இரண்டாம் இடம் பெற்றார். கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2021ஆம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தை சூட்டினார்.