வட மாகாணத்தின் மைலோ கால்பந்து சம்பியன்சிப் தொடரின் இறுதிச் சுற்றில் ஆடுவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 10 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட 16 ஆடவர் மற்றும் மகளிர் பாடசாலை அணிகள் தகுதி பெற்றுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்திற்காக கடந்த மார்ச் 2 ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இதில் 12 வயதுக்கு உட்பட்ட ஆடவர் பிரிவில் முல்லைத்தீவு மகாவித்தியாலயமும் 10 வயது ஆடவர் பிரிவில் இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய அணியும் வெற்றியீட்டின.
12 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணி வெற்றிபெற்ற நிலையில் 10 வயது பெண்கள் பிரிவில் உடையார்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி வெற்றிபெற்றது.
மைலோ கால்பந்தாட்ட சம்பியன்சிப் இறுதிச் சுற்றுப்போட்டி எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் துறையப்பா அரங்கில் நடைபெறவுள்ளது.