Saturday, May 18, 2024
Home » வங்கிகளுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பராட்டே சட்டம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம்

வங்கிகளுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

- சபையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

by Gayan Abeykoon
March 8, 2024 10:14 am 0 comment

பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ள போதும் வங்கிகளில் தொடர்ந்தும் அந்த சட்டத்தின் கீழ் தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலத்தில் விற்கப்பட்டு வருவதனால் அந்த வங்கிகளுக்கு எழுத்துமூலம் அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பராட்டே சட்டத்தை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை  தற்காலிகமாக இடை நிறுத்த அமைச்சரவை எடுத்த தீர்மானம் நடைமுறையில் செயற்படுத்தப்படுவதில்லை. வர்த்தக வங்கிகள் இன்னும் அந்த சட்டத்தையே பின்பற்றி நடவடிக்கைளை எடுத்துவருகின்றன.

அதனால் பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மத்திய வங்கியூடாக இந்த வர்த்தக வங்கிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராட்டே சட்டத்தின் கீழ் பலரின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு கடந்த வாரம் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வர்த்தக வங்கிகளே இந்த விளம்பரத்தை பிரசுரித்து வருகின்றன.

மத்திய வங்கியே நாட்டின் வங்கிக் கட்டமைப்பை கண்காணித்து வருவதால் மத்திய வங்கியூடாக வர்த்தக வங்கிகளுக்கு சுற்று நிருபம் ஒன்றின் மூலம் பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்க வேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு நானும் நன்றி கூறினேன். ஆனால் இன்று அந்தத் தீர்மானம் தவறாக பயன்படுத்தப்பட்டு அது அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

அரசாங்கம் மத்திய வங்கியூடாக வர்த்தக வங்கிகளுக்கு கடிதம் அனுப்பி, பராட்டே சட்டத்தின் ஊடாக சாதாரண கைத் தொழிலா்ளர்களின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும்.

அவ்வாறின்றி இச் சட்டத்தில் திருத்தம் செய்து அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது சம்பந்தப்பட்ட  வங்கிகள் கைத்தொழிலாளர்களின் சொத்துக்களை ஏலத்தில் விட்டு  முடித்துவிடுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT