தேவையான திருத்தங்களை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் வரை பராட்டே சட்டத்தை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நடைமுறையில் உள்ள பராட்டே சட்டத்தின் கீழ் மக்களின் சொத்துக்கள் மற்றும் காணிகளை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வணிக வங்கிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார் அவரது கூற்றுக்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம்.
இந்த சட்டம் கடந்த வருடங்களில் பல தடவைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் பத்து வருடங்களுக்கு ஒரு தடவை இந்த சட்டம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முதல்முறையாக நடைமுறைக்கு வந்த மட்டுப்படுத்தல்கள் தற்போது பல மடங்காக அதிகரித்துள்ளன.
அதன் காரணமாகவே அமைச்சரவையில் ஜனாதிபதி அது தொடர்பில் தெளிவாக ஆராய்ந்து அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளார். அந்த வகையில் தேவையான திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை அதனை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்