அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு மாநில அளவில் வேட்பாளரை தேர்வு செய்யும் முக்கிய நாளான கடந்த செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற முன்னோடி தேர்தல்களில் ஜனநாயக கட்சியில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டிய நிலையில் இந்த இருவருமே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ் உட்பட ஒரு டஜன் மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி தோல்விகளை சந்தித்து பின்னடைவை எதிர்கொண்டார்.
அவர் தொடர்ந்து போட்டியில் இருந்தபோதும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் வாய்ப்பை பெற சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. செவ்வாய் முன்னோடித் தேர்தலில் அவர் வெர்மொன்டில் மாத்திரமே வெற்றியீட்டினார்.
மறுபுறம் பைடன், மினிசோட்டா உள்ளிட்ட 15 மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி பலமாக இருக்கும் மாநிலங்களில் அவர் எளிதில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், காசா போரில் பைடன் அரசு இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு வழங்குவதையடுத்து அவருக்கு எதிர்ப்பு இருந்தது.