இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாளை (07) ஆரம்பமாகும் 145 ஆவது நீலங்களின் சமர் 3 நாள் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு 19 ஆவது முறையாக அனுசரணை வழங்குகிறது.
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மார்ச் மாதத்தின் பாடசாலைகளுக்கு இடையிலான பாரம்பரிய கிரிக்கெட் போட்டிகளுக்கு டயலொக் தனது அனுசரணையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் எதிர்வரும் மார்ச் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி இடையிலான 90ஆவது ‘புனிதர்களின் சமர்’ மற்றும் நாளை (07) ஆரம்பமாகும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரிகளுக்கு இடையிலான 117 ஆவது வடக்கின் சமர் போட்டிக்கும் டயலொக் தனது ஆதரவை நீடித்துள்ளது.
அதேபோன்று எதிர்வரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள திரித்துவ கல்லூரி மற்றும் புனித அன்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கும் டயலொக் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.