ஹோமாகம மேற்கு ஹொரகல விமலதிஸ்ஸ மாவத்தையிலிருந்து கிழக்கு ஹொரகலை வரையிலான வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இரண்டாயிரம் கோடி ரூபா செலவில் நாடு பூராகவும் 1500 கிலோமீற்றர் வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்திகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் ஆரம்பமானது
நீண்ட காலமாக இவ்வீதி புனரமைக்கப்படாதிருந்தது.
இதனால்,மாணவர்கள் மற்றும் இவ்வீதியால் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இந்நிலைமைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், பிரதேச விஹாரையை சேர்ந்த தேரர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர், ஹோமாகம உள்ளூராட்சி சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், பிரதேச மக்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய அமைச்சர்:
பழுதடைந்த வீதிகளை புனரமைக்கும் பணிகள் கடந்த மூன்று வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. வௌிநாட்டுக் கடன்களால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிகள், இப்பணிகளைப் பாதித்தன. அரசாங்கத்தை பாரமெடுக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள் நாட்டின் எதிர்காலத் திட்டம் பற்றி எதையும் சொல்வதாக இல்லை.பொருளாதார வீழ்ச்சியின்போதும் மக்களுக்குத் தேவையான சகலதையும் அரசாங்கம் செய்தது.வௌிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நிதியுதவிகள் மற்றும் கடன்களாலே இவை,செய்யப்படுகின்றன.
ஆனால், சில அரசியலவாதிகள் மக்களின் வரிப்பணத்தால் இவற்றைச் செய்வதாக விமர்சிக்கின்றனர். பிரச்சினைகளை தனியாக தீர்க்கும் சக்தி எவருக்கும் கிடையாது. சுருட்டுக் கடையைக் கூட நடத்தாதவர், ஆட்சி செய்ய ஆசைப்படுவது எந்த வகையில் நியாயம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.