நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ வர்த்தக நாமத்தின் அனுசரணையில் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரின் முதல் சுற்று போட்டிகள் 05 மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் நாளை (24) நடைபெறும் போட்டிகளுடன் ஆரம்பமாகும் இந்தத் தொடர், தொடர்ந்து முல்லைத்தீவு (மார்ச் 02), வவுனியா (மார்ச் 09), கிளிநொச்சி (மார்ச் 16) மற்றும் யாழ். (மார்ச் 22) மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. இதில் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 250 அணிகள் பங்கேற்கவுள்ளன. மாவட்ட மட்ட வெற்றியாளர்களாக 02 வயதுப் பிரிவுகளில் இருந்தும் 16 ஆடவர்– மகளிர் அணிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. இதன் இறுதிச் சுற்றுப் போட்டிகள் மார்ச் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெறும்.