உலக நீதிமன்றம் பலஸ்தீன வட்டாரங்களின் மீது இஸ்ரேல் நடத்தும் சுமார் 60 ஆண்டுகால ஆக்கிரமிப்புக் குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணையை நேற்று ஆரம்பித்தது. இந்த விசாரணை 6 நாட்கள் நடைபெறும்.
இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 50க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றுள்ளன. மேற்குக் கரை, காசா, கிழக்கு ஜெரூசலம் ஆகிய வட்டாரங்களில் இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பில் விசாரணை கவனம் செலுத்தும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதம் என்றும் சர்வதேச சட்டத்தின் 3 முக்கிய கொள்கைகளை அது மீறிவிட்டதாகவும் வாதிடப்போவதாய் பலஸ்தீனத் தரப்பினர் கூறினர்.
இஸ்ரேல் இனப் பாகுபாடு, இன ஒதுக்கல் ஆகியவற்றை அந்த வட்டாரங்களில் செயல்படுத்தியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை ஒன்றை அளிக்கும்படி ஐ.நா பொதுச் சபை இந்த நீதிமன்றத்தை 2022இல் கோரியது தொடர்பிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.