துபாயில் மரணமடைந்த இலங்கை பெண் ரெஜினாவின் (வயது 38) சடலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள் நாட்டில் இருக்கும் நிலையில், பிழைப்புக்காக இவர் துபாய் சென்றிருந்தார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த ஜனவரி 24 இல் துபாய் ராஷித் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இதையறிந்த துபாயில் பணிபுரியும் அவரது சகோதரி ஷார்ஜாவில் வசித்து வரும் நண்பி சுந்தரியை தொடர்பு கொண்டார். இதுபற்றி சமூக ஆர்வலரான முதுவை ஹிதாயதுக்கு அறிவிக்கப்பட்டது.
மேலும், இலங்கை துணை தூதரகம், கொழும்பிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் முறையான உதவி கிடைக்கவில்லை.
துபாயில் செயல்பட்டு வரும் இலங்கை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பெரேரா உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (18) அவரது சடலம் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.