‘மவ்பிம ஜனதா கட்சி’யின் எதிர்கால செயற்றிட்டங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் திலீத் ஜயவீர அறிவித்துள்ளார். பல்கலைக்கழக வாழ்க்கையின் போதும் அதன் பின்னரான காலத்திலும் அபிவிருத்தியடைந்த நாடே, தனது நோக்கமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், துரதிஷ்டவசமாக இந்த நோக்கம் இன்னமும் நிறைவேறவில்லை. இதன் காரணமாக நாங்கள் காணவிரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இறுதியாக ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘மவ்பிம ஜனதா கட்சி’யின் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
என்னை சுற்றியுள்ள அனுபவம்மிக்க அரசியல்வாதிகள் மற்றும் எனக்கு ஆதரவாகவுள்ள குறிப்பிடத்தக்க இளம் தலைமுறை யினருடன் இணைந்து நான், அரசியலில் ஈடுபடத் தீர்மானித்துள்ளேன். நாட்டுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 75 வருடங்களாக அரசியலில் நோக்கம் என்ற எதுவுமிருக்கவில்லை. அனைவரும் பயன்பெறக்கூடிய மாற்றங்களை கொண்டுவர எண்ணியுள்ளோம். வரலாற்று ரீதியாக நாங்கள் ஏற்கனவே உள்ள அரசாங்கங்களை மாற்றுவதற்காக புதிய அரசாங்கங்களை பதவியில் அமர்த்தி வந்துள்ளோம். ஆனால் அதிலிருந்து நாங்கள் வித்தியாசமானவர்கள். புத்திஜீவிகளுடனான கலந்துரையாடல்கள் கருத்துப்பரிமாற்றங்கள், ஆராய்ச்சிகள் மூலம் அனைத்து இலங்கையரின் வாழ்க்கையிலும் சாதகமான மாற்றங்களை உருவாக்க எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொழில்முனைவோரது நாட்டை உருவாக்குவதே எங்கள் இலக்கு. கிராம மட்டத்திலுள்ள தொழில்முனைவோரை தேசத்தின் மிகப்பெரிய தொழில்முனைவோராக மாற்றுவதற்கான திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போமென தெரிவித்துள்ள திலீத் ஜயவீர, வழமையான பாரம்பரிய தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு பதில் உங்கள் எதிர்காலத்துக்கான முழுமையான திட்டமொன்றை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.