இராணுவத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் நலனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல நிகழ்ச்சிகள் கடந்த 14 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றன.
அதன்போது இராணுவ உறுப்பினர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நலன்புரி அறக்கட்டளையில் உறுப்புரிமையைப் பெற்றுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள், சிப்பாய்களின் திட்டமிடப்பட்ட தீவிர அறுவைச் சிகிச்சைகள் மற்றும் தீவீரமற்ற அறுவைச் சிகிச்சைகள் தொடர்பில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக ‘கேஸ்லெஸ் மெடி கிளைம்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்துடன் தொடர்புடைய சுவாசஹன காப்புறுதி நிதியத்தின் கீழ் வைத்தியசாலைக் கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுதல் மற்றும் பரிமாற்றம் இராணுவ தளபதி மற்றும் வைத்தியசாலை பிரதிநிதிகளின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி, இத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 33 தனியார் வைத்தியசாலை வலையமைப்புகளின் ஊடாக இராணுவ உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிதியத்தில் அங்கம் வகிக்கும் ஓய்வுபெற்ற போர்வீரர்களும் இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஆசிரி வைத்தியசாலை ஹோல்டிங்ஸ் பிஎல்சி, தேவைப்படும் வீரர்களின் குழந்தைகளுக்காக மாதாந்தம் இரண்டு இருதய அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தது,
மேலும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய படையினரின் 635 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், போர்வீரர்களின் மகன்மார் மற்றும் மகள்மாரின் கல்வியை இலகுபடுத்தும் வகையில் பெறுமதியான ‘கற்றல் நண்பன்’(Study Budy) எனும் 300 இணைய விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன.