– பெப்ரவரி 29 இல் மீண்டும் விசாரணை
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு எதிர்வரும் (19) திங்கட்கிழமை நடைபெறவிருந்தது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு இந்த மாநாட்டை நடத்த வேண்டாமென திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை விதித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று (15) இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் இடைக்கால தடையுத்தரவை திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் விதித்துள்ளது.
இவ்வழக்கில், மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் ஆஜராகினர்.
கடந்த 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடை பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும்
செயற்குழுக் கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றது எனவும் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும், செல்லுபடியற்றது எனவும் மன்றில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழரசு கட்சியின் யாப்பு விதி அனுமதிக்கும் தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் கூட்டங்களில் பங்குபற்றி, வாக்களித்ததால், இக்கூட்டம் சட்டமுரனானது எனவும் இதன் போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாதங்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம் மாநாட்டை நடத்துவதற்கு இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது.
இவ்வழக்கு மீண்டும் இம்மாதம் 29ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ரொட்டவெவ குறூப் நிருபர்