இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் நல்ல உள்ளங்கள் சிலர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தமது சொந்த நிதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்றார்கள். அவர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்தான் பத்மநாதன் ரங்கனாதன் என்பவர்.
யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்ட ரங்கனாதன் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். அன்றை போர்ச் சூழல் காரணமாக 1995 இல் இடம்பெயர்ந்து வவுனியாவில் வாழ்ந்தார்.
சிறுவயதில் இருந்தே தானதருமங்கள் செய்வதிலும், கலை கலாசார சமூக சேவைகளை செய்வதிலும் ஆர்வமாக செயற்பட்டவர். ‘ரங்கன் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை ஸ்தாபித்து நலிவடைந்த மக்களுக்கான பணியினை முன்னின்று செய்துவந்தார். இவர் 2009 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்று அங்கு ‘ரங்கனாஸ்’ எனும் நகைமாளிகை ஒன்றை நிறுவி, மக்களுக்கான தமது சேவையினை மேலும் விரிவாக்கிக் கொண்டார்.
வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என பல்வேறு இடங்களிலும் வறுமையில் வாடும், வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதிக்குள்ளாகிய மக்களுக்கு தனது சொந்த நிதியில் உதவிகளை வாரிவழங்கி அம்மக்களுக்கு உதவி செய்துள்ளார். கல்வி, பொருளாதாரம், கலை, கலாசாரம் என சகல துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
குறிப்பாக வறுமை காரணமாக திருமணம் ஆகாமல் தடைப்பட்டு இருந்த பல திருமணங்களை நகை, வீடு, சீதனம் வழங்கி முன்னின்று நடத்திக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல பல ஆலயங்களின் கட்டுமானப் பணிகளுக்கு பேருதவி புரிந்து வருகின்றார். திருகோணமலையில் பூம்புகார் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். அந்த ஆலயத்தின் கும்பாவிஷேகம் விரைவில் நடைபெறவுள்ளது.
ரங்கன் நற்பணி மன்றம் இலங்கை மக்களுக்கு செயதுவரும் பணிகள் தற்காலத்திற்கு மிக அவசியமான பணியாக இருக்கின்றன. கனடாவில் வசிக்கும் ரங்கனாதன் தலைசிறந்த மிருதங்கக் கலைஞர். 2000 ஆம் ஆண்டு வவுனியா சுத்தானந்தா இந்து மன்றத்தில் மிருதங்கம் அரங்கேற்றம் செய்து பலராலும் பாராட்டுப் பெற்றவர்.
அத்துடன் யாழ் மத்திய கல்லூரியின் கிரிக்கட் வீரராகவும் இருந்து பல சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர் கடல் கடந்து சென்றாலும் தன் தாயக மக்களுக்காக தனது சொந்த நிதியில் ரங்கன் நற்பணி மன்றம் மூலம் பணிகளை செய்து வருகின்றார்.
செ.துஜியந்தன் (பாண்டிருப்பு தினகரன் நிருபர்)