Saturday, May 18, 2024
Home » பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழப்பு

by Rizwan Segu Mohideen
February 8, 2024 8:04 am 0 comment

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பலுகிஸ்தான் மாகாணத்தில் நேற்று (07) இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற முதல் குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 150 கிலோமீற்றருக்கு அப்பால் இடம்பெற்ற இரண்டாவது குண்டு வெடிப்பில் மேலும் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜமைத்துல் உமாவே இஸ்லாம் கட்சி தேர்தல் அலுவலகத்தை இலக்கு வைத்து கிலா சைபுல்லா நகரின் பிரதான சந்தையில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றிருப்பதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை. வாக்குப் பதிவு திட்டமிட்டபடி இடம்பெறும் என்று பலுகிஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் பிரசாரங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் வாக்குப் பதிவு உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் 128 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT