மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களைக் கொண்டு ‘பில்லர்ஸ் ஒப் மதீனா’ மாணவர் அமைப்பு உதயமாகியுள்ளது. ஆழிப்பேரலையினால் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி காவுகொள்ளப்பட்ட போது அப்பிரதேச மாணவர்களுக்காக சம்ஸ் மத்திய கல்லூரியின் அமைவிடத்தில் உருவாக்கப்பட்டதே மதீனா வித்தியாலயமாகும்.
இப்பாடசாலையில் கல்வி கற்ற க.பொ.த (சா.த) எழுதிய மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘PILLARS OF MADEENA’ -(மதீனாவின் தூண்கள்) பாடசாலை மாணவர்களைக் கொண்ட சமூக சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளமை முக்கிய அம்சமாகும்.
அமைப்பின் ஊருவாக்கத்தை அடையாளப்படுத்தும் நோக்கில் பழைய மாணவர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.குனுக்கத்துல்லா தலைமையில் இடம்பெற்றது. பைத்துல் ஹெல்ப் சமூக சேவை அமைப்பின் அனுசரணையில் வழங்கப்பட்ட சீருடை அறிமுக நிகழ்வில் அதன் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ரைசுல் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சமூக சேவை அமைப்பின் முதலாவது பணியாக தாம் கல்வி கற்ற பாடசாலையின் முற்றத்தை அழகுப்படுத்தும் சிரமதானப் பணியினை அமைப்பினர் மேற்கொண்டனர். அவர்கள் புதிய மேலங்கி அணிந்து சிரமதானம் மேற்கொண்டனர்.
கடற்கரைப் பிரதேசத்தை அண்மித்த அமைவிடத்திலுள்ள இப்பாடசாலையில் கல்வி கற்கும் குறைந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட மாணவர்களின் கல்விக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதே அமைப்பின் எதிர்கால பிரதான வேலைத்திட்டமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஸ்மி எம். மூஸ (பெரியநீலாவணை தினகரன் நிருபர்)