சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 450 கிலோ கிராம் பீடி இலைகளை கலால் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மதுவரி திணைக்களத்தின் கொதட்டுவ போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, களனி மற்றும் வரக்காபொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இவை இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பெறுமதி ரூ. 45 இலட்சத்திற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, கொதட்டுவ மதுவரி திணைக்கள போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் நால்வரும், ஏற்றிச் செல்லப்பட்ட லொறியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேடமாக தயாரிக்கப்பட்ட 18 பெட்டிகளில் இந்த பீடி இலைகள் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக, மதுவரி திணைக்களத்தின் கொதட்டுவ போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.