ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்வதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் நன்றி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரபை சந்தித்த ஆசிரியர்கள், தங்களது இடமாற்றங்களை இரத்துச் செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவர்களின் கோரிக்கைகளை ஏற்ற முஷாரப் எம்.பி, இதுகுறத்து கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார். அம்பாறை மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள நிலையில்,சுமார் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்டத்துக்கு வௌியே இடமாற்றப்பட்டுள்ளனர்.
அதிகரித்த வாழ்க்கைச் செலவு, மூப்பு நோய் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு
இவ்விடமாற்றங்களை மறுபரிசீலனைக்கு எடுக்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டது.இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அவசரமாக கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடினார்.
இதற்கமைவாக, அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை அம்பாறை மாவட்டத்துக்குள்ளேயே பொருத்தமான இடங்களில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று உறுதியளித்தார்.
இந்த துரித நடவடிக்கைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமானுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் முசாரப் எம்.பி தெரிவித்துக் கொண்டார்.
இடமாற்றங்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் எம்பிக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அட்டாளைச்சேனை விசேட நிருபர்