செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக அமெரிக்க வர்த்தகக் கப்பல் ஒன்றை தாக்கியதாக யெமன் ஹூத்தி அமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்காவால் இயக்கப்படும் கே.ஓ.ஐ. என்ற கப்பலையே தாக்கியதாக அந்த அமைப்பு கூறியது.
யெமனின் அதென் துறைமுயத்தின் தெற்காக இயங்கும் கப்பல் ஒன்று தீப்பற்றி இருப்பதாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான அம்ப்ரே குறிப்பிட்டபோதும் அந்தக் கப்பலின் பெயர் வெளியிடப்படவில்லை.
இதேநேரம் அனுப்புவதற்கு தயாராக வைக்கப்பட்ட 10 ஆளில்லா விமானங்களை இலக்கு வைத்து யெமன் மீது அமெரிக்கா புதிய வான் தாக்குதல்களை நடத்துள்ளது.
இதில் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் கே.ஓ.ஐ. கப்பல் லைபீரிய நாட்டு கொடியுடனான பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஓசியானிக்ஸ் சேவைகள் நிறுவனத்தினால் இயக்கப்படும் கொள்கலன் கப்பல் என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹூத்திக்கள் தம் மீது தாக்குதல் தொடுக்கும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு கப்பல்களையும் இலக்கு வைத்து வருகின்றனர்.