மூதூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கட்டபறிச்சான் வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியோரமாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான சந்தைக்கட்டடத்தொகுதி நீண்டகாலமாக எவ்வித பயன்பாடுமின்றி பாழடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல இலட்சக்கணக்கான ரூபா நிதியைப் பயன்படுத்தி கட்டப்பட்ட சந்தைத்தொகுதி எந்தவித பயன்பாடுகளுமின்றி புற்புதர்கள் வளர்ந்து கவனிப்பாரின்றி சேதமடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தைக்கட்டடத்தொகுதி தற்சமயம் ஆடு மாடுகளின் உறைவிடமாகவும் மாறிவருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் பாழடைந்த இக்கட்டடத்தொகுதி சமூக சீர்கேடான செயற்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மூதூர் கிழக்குப்பகுதியில் சந்தை வசதிகள் இல்லாமையால் இதனை இயக்கச்செய்வதன் மூலம் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலரும் பெரிதும் பயனடைவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் சந்தை வசதிகளின்மையால் மக்கள் மிக நீண்ட தூரத்துக்கு அப்பால் மூதூர் பொதுச்சந்தைக்கு சென்றுவரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால் வீண் செலவீனத்தையும் பெரும் அசௌகரியத்தையும் எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே உரிய தரப்பினர் இதுதொடர்பில் கவனம் செலுத்தி சந்தை கட்டடத்தொகுதிகளை இயங்கச்செய்யவேண்டுமென பொதுமக்களும் நலன் விரும்பிகளும் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
(தோப்பூர் தினகரன் நிருபர்)