ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அடிப்படையாகக் கொண்டு புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டமைப்பின் தலைவருக்கு தனித்து தீர்மானம் மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட மாட்டாதென்றும் சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க மற்றும் கூட்டமைப்பில் இணையும் ஏனைய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் உள்ளடங்கும் வகையில் தலைமைத்துவ சபையொன்றை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கூட்டமைப்பின் 50% அதிகாரத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டிருப்பதுடன் ஏனைய கட்சிகள் மீதமான 50% அதிகாரத்தைக் கொண்டிருக்கும் வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்