வெலிக்கந்தை, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து பெருமளவான கைதிகள் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களில் 17 பேர் நேற்று அதிகாலை சுங்காவில பாலத்துக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
நவசேனபுர தொழிற்பயிற்சி மத்திய நிலையத்திலுள்ள கைதிகள் மற்றும் கந்தக்காடு தொழிற்பயிற்சி மத்திய நிலையத்திலுள்ள கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்தக் கைதிகள் தப்பிச் சென்றதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளில் ஏனைய கைதிகள் சோமாவதி வனப்பகுதி மற்றும் அதற்கு அண்டிய இடங்களில் மறைந்திருப்பதாகத் தெரிவித்த பொலிஸார், இவர்களை கைது செய்வதற்காக இராணுவத்தினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 408 கைதிகள் புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் அவர்களில் சுமார் 200 பேர் தப்பிச் சென்றிருக்கலாமெனவும், வெலிக்கந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்