சமூக வலைத்தலங்கள் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களைத் தடுத்து அரசாங்கத்தின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான துரும்பாகவே நிகழ்நிலை காப்புச்சட்ட மூலத்தை அரசாங்கம் பயன்படுத்த முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சமூக வலைத்தளங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையிலேயே, நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
எனினும், இவ்வாறான காரணங்களை தெரிவித்து அரசாங்கம் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள இச்சட்டமூலத்தை துரும்பாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவே எமக்குத் தெரிகிறது.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களை தடுப்பதற்கு இச்சட்டமூலத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் சட்டமூலத்தில் காணப்படும் 57 பிரிவுகளில் 2 பிரிவுகளில் மாத்திரமே பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏனைய அனைத்து விடயங்களும் வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வலைத்தளங்கள் ஊடாக தகவல் பரிமாற்றிக்கொள்ளும் விடயங்களுமே காணப்படுகின்றன. இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் நீண்ட கலந்துரையாடல் இடம் பெற்றதையும் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)