இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடகப் பணியை கௌரவிக்கும் முகமாக அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் வெளியிடப்பட்டது. கலாசூரி இ.சிவகுருநாதன் இலங்கை இலக்கியப் பரப்பிலும், ஊடகத்துறையிலும் தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக் கொண்டவர். அவரை கௌரவிக்கும் முகமாக அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் சிறப்புற இவ்விழா நடைபெற்றது.
கலாசூரி இ.சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை(20/1/24) மாலை 4.30 மணிக்கு அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நடைபெற்றது.
இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளருமான க. திருவருள் வள்ளல் தலைமையில் கன்பராவில் உள்ள தமிழ் மூத்த பிரஜைகள் சங்க மண்டபத்தில் விழா சிறப்புற நடைபெற்றது.
நூல் வெளியீட்டு விழாவில் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி நூலை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார். அதன் பின்னர் நிமலன் கார்த்திகேயன், இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதனை பற்றிய சிறப்புரை நிகழ்த்தினார்.
அத்துடன் சிறப்பு அதிதியாக இலங்கை அரசின் உயர்ஸ்தானிகர் திருமதி சித்ராங்கனி வாகிஷ்வரா இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தினகரனில் சிவகுருநாதன் ஆற்றிய பணி தொடர்பான சிறப்புரையை எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமான சுந்தரதாஸ் ஆற்றினார். அதன் பின்னர் ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூலின் தொகுப்பாசிரியர் ஐங்கரன் விக்கினேஸ்வரா நூலின் ஏற்புரையை வழங்கினார். அத்துடன் இளம் மாணவனான அரஜூன் விஷ்ணு ‘தனது வாழ்வியல் வழிகாட்டி’ எனும் பொருளில் தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரை நினைவு கூர்ந்தார்.
இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, தொகுத்து வழங்கும் சின்னத்துரை மயூரன் வழங்கிய நன்றியுரையுடன் இறுதியாக விழா நிறைவு பெற்றது.
தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதன் இலங்கை இலக்கியப் பரப்பிலும், ஊடகத்துறையிலும் தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக் கொண்டவர். அவரை கௌரவிக்கும் முகமாக அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் சிறப்புற இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.