Home » நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை

நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை

- கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து அதன் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும்

by Rizwan Segu Mohideen
January 16, 2024 8:10 pm 0 comment

 – நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் பெப்ரவரியில் மீள ஆரம்பிக்கப்படும்

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும், எனவே அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து அந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பெப்ரவரி மாதத்தின் பின்னர் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும், அதனை சீர்குலைக்க சில தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளை இனங்கண்டு தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,

“இலங்கையைப் போன்று சுமார் 75 அரசியல் கட்சிகள் இருக்கும் நாடு உலகில் வேறு எங்கும் இல்லை. அதனால் நம் நாட்டில் பிளவுகள் உருவாகியுள்ளன. இது நாட்டில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் பல அழிவுகளுக்கும் வழிவகுத்தது. இந்த கட்சிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது? யார் செலவு செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க எந்த முறைமையும் இல்லை. எனவே இந்தக் கட்சிகள் எவ்வாறு தேர்தலில் பணத்தை செலவிடுகின்றன என்பதை கண்டறியக் கூடிய சட்டமூலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதற்குக் காரணம், அதலபாதாளத்திற்குச் சென்ற நாட்டை சுமார் ஒரு வருடமும் ஆறு மாதங்களில் மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு சென்றமையால் ஆகும். ஜனாதிபதி ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தையும் அந்த நோக்கத்திற்காக திறம்பட பயன்படுத்தினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அத்துடன் 2020ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட எமது கட்சியின் விஞ்ஞாபனம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். அப்படியானால், அவர்கள் தோற்கடித்த விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எரிபொருள், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி அனுபவிக்கின்றார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அந்த ஆவணத்தால்தான் இன்று நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

டோக்கியோ மாநாட்டில் அன்று நாம் முன்வைத்த “யழி புபுதமு ஸ்ரீலங்கா” (இலங்கையை மீண்டும் மீட்டெடுப்போம்) என்ற நூலில் உள்ள விடயங்களை அரசாங்கம் இன்று நடைமுறைப்படுத்துகின்றது. இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் அதனைப் படிக்க வேண்டும்.

இனி ஒருவரையொருவர் விமர்சிப்பதில் அர்த்தமில்லை. வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தவிர வேறு மாற்று வழியில்லை. அந்தத் திட்டத்தால் இன்று மக்கள் வரிசையில் நிற்காமல் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்தப் பயணத்தை யாரேனும் மாற்றினால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அரசியல் இலாபங்களுக்காக சில சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்ட சில பொய்யான அறிக்கைகளுக்கு அதனை முன்வைத்த அந்தக்கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும்.

2022ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற போது, இந்த நாட்டில் அரசியல் செய்யும் திறமை எவருக்கும் இருக்கவில்லை. எந்த ஒரு அபிவிருத்திப் பணியையும் செய்ய யாருக்கும் பலம் இல்லை. மூன்று வருடங்களாக தடைப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிந்துள்ளது.

ஆனால் சில கட்சிகள் இந்நாட்டின் அபிவிருத்திப் போக்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. அந்த குழுவினர் இந்த நாட்களில் வேலைநிறுத்த அலைகளை ஆரம்பித்துள்ளனர். இதை உலகம் முழுவதும் பரப்பி, இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கலாம். அதன் மூலம் எமது நாட்டுக்கு பல பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், கடன் மறுசீரமைப்புக்காக, ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப்புடன் ஒரு ஒப்பந்தமும், சீனாவுடன் மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட உள்ளது. அதன் மூலம், பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெய்கா நிறுவனம் மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவுடன் நாட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சி செய்யலாம். இவ்வாறான முயற்சிகளை இனங்கண்டு முறியடிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT