‘அவலோகிதேஷ்வர’ எனும் கௌதம புத்தரின் பின்னர் வரவுள்ள புத்தர் தாம் என தெரிவித்து, பிரசங்கம் செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்ட மஹிந்த கொடிதுவக்குவிற்கு எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்ளும் குறித்த நபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, பௌத்த மத தலைவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமைய, சந்தேகநபர் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் பன்னிப்பிட்டியவில் நேற்று (15) கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று (16) சந்தேகநபரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கான பயணத்தடையையும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 01ஆம் திகதி எகிப்தில் இருந்து இலங்கை வந்திருந்த மகிந்த கொடிதுவாக்கு, நாட்டின் பல இடங்களுக்குச் சென்று ‘அவலோகிதேஷ்வர’ எனும் பெயரைில் சொற்பொழிவுகளை முன்னெடுத்து வந்துள்ளதோடு, அவரை மக்கள் பின்பற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபரின் விரிவுரைகள் மூலம் புத்தரின் போதனைகள் அவமதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சந்தேகநபர் நேற்று (15) பிற்பகல் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, சந்தேகநபர் தங்கியிருந்த கெஸ்பேவ, மாகந்தன சர்வோதய வீதியில் உள்ள 2 மாடிகளைக் கொண்ட வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டை சோதனையிட்டனர்.
இதன்போது தங்க நிறத்தில் அமைந்த கதிரை போன்ற ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.