கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகாரங்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு புனர் வாழ்வளிப்பதற்காக அவர்கள் தங்க வைக்கப்படும் வெலிக்கந்தை, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரண்டு கைதிகள் குழுவினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் குழப்ப நிலை தொடர்பில், உடனடியாக தமக்கு அறிக்கை யொன்றை சமர்ப்பிக்குமாறும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், மேற்படி குழப்பநிலை மற்றும் கைகலப்பு அங்கு வழங்கப்பட்ட மதிய உணவு தொடர்பில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஏற்பட்டு வரும் இத்தகைய மோதல்கள் தொடர்பில், இரண்டு தினங்களுக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள அமைச்சர், அங்கு நிர்வாக மாற்றம் ஒன்றை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்