Friday, May 3, 2024
Home » ரூ. 1,600 கோடி பெறுமதியான இருபது ரயில் எஞ்ஜின்கள்; இந்தியா அன்பளிப்பு
வரலாற்றில் முதல் முறையாக

ரூ. 1,600 கோடி பெறுமதியான இருபது ரயில் எஞ்ஜின்கள்; இந்தியா அன்பளிப்பு

இரண்டு எஞ்ஜின்களை பார்வையிட 65 பேர் இந்தியா சென்றதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி கவலையளிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

by damith
January 15, 2024 7:15 am 0 comment

வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது ரயில் எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒரு ரயில் எஞ்ஜின் பெறுமதி 800 மில்லியன் ரூபாவென தெரிவித்த அமைச்சர், சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ இவ்வாறான பாரிய அன்பளிப்பு வரலாற்றில் முதல் தடவையாக கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

20 ரயில் எஞ்ஜின்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி , எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்தவகையில், தமது வேண்டுகோளுக்கு கவனம் செலுத்தியமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கையிலிருந்த முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கும், தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

—-அதேவேளை, இலவசமாக வழங்கும் இரண்டு எஞ்ஜின்களை பார்வையிடுவதற்காக இலங்கையிலிருந்து 65 பேர் இந்தியாவுக்குச் சென்றதாக பொய்யான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்து பேர் கொண்ட குழுவே இந்தியா சென்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் விளக்கமளித்த அமைச்சர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய பத்திரிகையொன்று இலவசமாக இந்தியா வழங்கும் எஞ்ஜின்களை பார்வையிடுவதற்காக இலங்கையிலிருந்து 65 பேர், இந்தியா சென்றதாக பொய்யான செய்தியொன்றை பிரசுரித்துள்ளது. இது தொடர்பில் நான் கவலையடைகிறேன். நீண்டகாலமாக பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கும் ரயில் சேவை, மிக மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாதநிலை காணப்பட்டது. நீண்டகாலமாக ரயில் திணைக்களம் நட்டமீட்டி வருவதால் அதனை மீள் முதலீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனது. பெரும்பாலான ரயில் சேவை அபிவிருத்தி நடவடிக்கைகள் வெளிநாட்டுக் கடன்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் பாதை புனரமைப்பு, ரயில் எஞ்ஜின்கள் கொள்வனவு மற்றும் தேவையான உதிரிப்பாகங்களையும் வெளிநாட்டுக் கடன் மூலமே பெற வேண்டியுள்ளது. கொழும்புத் திட்ட உதவி, கனேடிய உதவி, இந்திய கடனுதவித் திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மூலமாகவே எமது ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கான கடன்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT