செங்கடலில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடன் நிறுத்தும்படி யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களை ஐ.நா பாதுகாப்புச் சபை கேட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த புதன்கிழமை கொண்டுவரப்பட்ட பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எனினும் வீட்டோ அதிகாரம் பெற்ற ரஷ்யா மற்றும் சீனாவுடன் மொசம்பிக், அல்ஜீரிய நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.
எனினும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அனுசரணையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் ஓர் “அரசியல் விளையாட்டு” என்று ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சார்பில் பேசவல்ல முஹமது அல் ஹூத்தி தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹூத்திக்களின் இந்தத் தாக்குதல்களுக்கான விளைவை சந்திக்க வேண்டி ஏற்படும் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகள் எச்சரித்திருந்தன.
உலகின் கொள்கலன் கப்பல்களின் 20 வீதமானவை தற்போது செங்கடலை தவிர்த்து பதிலாக தெற்கு முனையைச் சுற்றி மிக நீண்ட பாதையை பயன்படுத்தி வருவதாக சர்வதேச கப்பல் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.