நாடளாவிய ரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன. இதனால், மருத்துவமனைகளுக்குச் சென்ற நோயாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் அரச தாதிய உத்தியோகத் தர்கள் இணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள் சுகவீன விடுமுறைபோராட்டத்தில் குதித்துள்ளனர்.இப்போராட்டம்,
நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
இப்போராட்டத்துக்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டது. வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் நேற்று புதன்கிழமை (10) பணிக்கு சமுகமளிக்காமையால் வைத்தியசாலையின் சேவைகள் பல ஸ்தம்பிதமடைந்தன.
குறிப்பாக பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்படதையடுத்து தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை.
எனவே, அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பற்சிகிச்சை நிபுணர்கள், மருந்து கலவைகள் நிபுணர்கள், ECG தொழில்நுட்ப நிபுணர்கள், EEG தொழில்நுட்ப நிபுணர்கள், கண் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.