குறைந்த வாக்குப் பதிவு மற்றும் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்த பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் பிரதமர் ஷெய்க் ஹசீனா அறுதிப் பெரும்பான்மையுடன் தொடர்ச்சியாக நான்காவது முறையாக வெற்றியீட்டியுள்ளார்.
பொதுத் தேர்தலை மத்தியஸ்த குழுவினால் நடத்தும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) நடந்த தேர்தலை புறக்கணித்திருந்தது. 76 வயதாக ஹசீனா 1996 ஆம் ஆண்டு முதல் முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் இப்பதவிக்கு தெரிவாகி இருப்பது இது ஐந்தாவது முறையாக உள்ளது.
எனினும் இந்தத் தேர்தலில் சுமார் 40 வீத வாக்குப் பதிவே இடம்பெற்றிருப்பதோடு அதுவே 2018 இல் 80 வீதமானவர்கள் தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி இந்தத் தேர்தலில் 300 ஆசனங்களில் 222 இடங்களை வென்றிருப்பதாக ஆரம்ப தேர்தல் முடிவுகளில் தெரியவருகிறது. தேர்தலில் எதிர்கட்சியாக போட்டியிட்ட ஜாடியா கட்சி 11 இடங்களையே வெல்ல முடிந்துள்ளது.
ஏற்கனவே எதிர்கட்சிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் அவாமி லீக்கின் இந்த வெற்றி நாட்டில் ஒரு கட்சி ஆட்சிக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.